சனி, 29 டிசம்பர், 2012

ஒரு மொழி

     மொழிக்கும் எனக்கும் ஆன தூரம் நீளும் பொழுது எனக்கும் எனக்கும் ஆன தூரமும் நீள்கிறது. பாடல்களே எனக்கு அனைத்தும் சொல்லிக் கொடுக்கின்றன. பெரும்பாலும் ஊமையாகவே இருக்கும் நான், அதிகம் பேசுவது வரிகளுடன் தான். அருவிக்கு பயப்படும் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாய் நனைந்து சிரிப்பதாய், என் கவிதை அறிமுகம் இருக்கவில்லை. அருவியை நிமிர்ந்து பார்த்தே உள்ளே செல்லும் என் பழக்கம், இதிலும் தொடர்ந்தது. மூச்சுத் திணறி மீண்டும் முழுக ஆசைப்பட்டவன். அதனால் தானோ என்னவோ ஆற்றைபோலவே அருவிகளும் என் கை பிடித்து அழைத்து போகும். எதிலும் எளிதாய் குறைகள் கண்டுபிடிக்கும் என் குறை தளைகளின் புணர்வில் நிறைந்து வழிகிறது.
     சோதி மிக்க நவ கவிதை எழுதிட நானில்லை. கேட்காத முறை, பார்க்காத கோணம், இந்தப் புதுமை, அந்தப் புதுமை எதுவும் என்னிடம் இல்லை. 
     அன்று எழுதிய பாடல்கள் உரைகளாலேயே கிழிக்கப் பட்டன. கரையானாலும் கரைகளின் பாதுகாப்பிலும் கரைந்து போயின. இலைகள் தாண்டி பூனைகளிடம் இழைந்து, நாய்கள் தாண்டி பனைகளுடனும் பேசி பாடல்களின் பேச்சை கவனிக்கிறேன். கை குலுக்கி, அருகே அமர்ந்து உற்றுக் கேட்கும் வேளையில் கேட்கிறது அவை யுகந்தோறும் காடு மேடாய் காற்றாய் ஒளியாய் சுமந்து வந்தவை. 
     பாடல்களின் மொழி ஒன்று உண்டு. வெறும் அர்த்தக் கட்டுக்களை சுமந்து வரும் விறகு வியாபாரியாய் அவை இல்லை. மொழியுடன் உறவு கொள், ஒவ்வொரு பாடலுடனும் பேசிப்பழகு. ஒவ்வொரு எழுத்தின் அடிநாதமும், ஒவ்வொரு எழுத்தின் அடியிலும் பிரபஞ்ச அடிநாதமும் உனக்காய் காத்திருக்கும். மழைத்துளிகளுக்கு ஒரு மொழி, சருகுகளுக்கு ஒரு மொழி, மொழிக்கொரு மொழி. அதில் இருக்கிறது என் மொழி. 
     எனக்கும் மொழிக்குமான மொழி ஒரு மொழி, எனக்கும் எழுத்துக்குமான மொழி ஒரு மொழி.