திங்கள், 24 செப்டம்பர், 2012

பிச்சைக்காரியும் கொஞ்சம் மணலும்

                               இது ஓர் ஏக்கம். வியப்பு. லூசு  என்று எல்லோரும் சொல்லும் சிலரின் அன்றாட வாழ்க்கை. அவள் யார்? தெரியாது. எப்படி இங்கே? தெரியாது. ஏன் இப்படி ? தெரியாது.
                              ஒரு அழுக்குச் சட்டையோடு எப்போதும் என் விடுதியின் சுவற்று நிழலில் இருப்பவள். கொட்டிவைத்த மணலில் புரண்டு கொண்டு, உடலின் மறைவுப் பகுதிகளை பற்றிக் கவலைப்படாது இருப்பவள். கலைந்த முடி, கவலை காட்டாத முகம். எப்போதாவது சிறு நகை. அடடா என்ன வாழ்க்கை? கஞ்சா அடித்து விட்டு ஒருசிலர் அவள் பக்கத்தில் படுக்கும் பொழுது அவளின் ஈன ஸ்வரம். வெட்கமோ  கற்பென்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவள், பிடிக்காதார் தொடுகையில் சினுங்கிடும் குழந்தையாய்.
                              அந்த மணற்பறப்பு அவள் சிம்மாசனம். நாலடி நிழலோ சமயத்தில் ஓரடி நிழலோ, அவளின் வீடு. என்னால் முடிந்தது, இரவில்  எனக்குத்தரப் படும் ஒற்றை வாழைப் பழத்தை அவளுக்குக் கொடுப்பது.
                           அவள் தருவது என்னைப் பார்த்ததும் சிறு சிரிப்பு.

இயல்

எனக்கு  வேறு வேலையில்லை
வேளைமறந்து என்னையே பாட
அணுவிலிருந்து  அண்டம்வரை
நீளும் என்னியல்பும் எண்ணியல்பும்
மண்ணும் மன் மதனமும்
புண்ணும் பல பிணமும்
பித்தமும் ஓட்டு நத்தமும்
பிரிந்த மஞ்சள் சூரியனும்
பறித்த  ஊமத்தம் பூவும்
 ஈனமும்   மெல்லீனமும்
உள்ளும் உள்ள
கடமும் 
 அட கடவுளும்
கடை உளுந்தும்..