சனி, 29 டிசம்பர், 2012

ஒரு மொழி

     மொழிக்கும் எனக்கும் ஆன தூரம் நீளும் பொழுது எனக்கும் எனக்கும் ஆன தூரமும் நீள்கிறது. பாடல்களே எனக்கு அனைத்தும் சொல்லிக் கொடுக்கின்றன. பெரும்பாலும் ஊமையாகவே இருக்கும் நான், அதிகம் பேசுவது வரிகளுடன் தான். அருவிக்கு பயப்படும் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாய் நனைந்து சிரிப்பதாய், என் கவிதை அறிமுகம் இருக்கவில்லை. அருவியை நிமிர்ந்து பார்த்தே உள்ளே செல்லும் என் பழக்கம், இதிலும் தொடர்ந்தது. மூச்சுத் திணறி மீண்டும் முழுக ஆசைப்பட்டவன். அதனால் தானோ என்னவோ ஆற்றைபோலவே அருவிகளும் என் கை பிடித்து அழைத்து போகும். எதிலும் எளிதாய் குறைகள் கண்டுபிடிக்கும் என் குறை தளைகளின் புணர்வில் நிறைந்து வழிகிறது.
     சோதி மிக்க நவ கவிதை எழுதிட நானில்லை. கேட்காத முறை, பார்க்காத கோணம், இந்தப் புதுமை, அந்தப் புதுமை எதுவும் என்னிடம் இல்லை. 
     அன்று எழுதிய பாடல்கள் உரைகளாலேயே கிழிக்கப் பட்டன. கரையானாலும் கரைகளின் பாதுகாப்பிலும் கரைந்து போயின. இலைகள் தாண்டி பூனைகளிடம் இழைந்து, நாய்கள் தாண்டி பனைகளுடனும் பேசி பாடல்களின் பேச்சை கவனிக்கிறேன். கை குலுக்கி, அருகே அமர்ந்து உற்றுக் கேட்கும் வேளையில் கேட்கிறது அவை யுகந்தோறும் காடு மேடாய் காற்றாய் ஒளியாய் சுமந்து வந்தவை. 
     பாடல்களின் மொழி ஒன்று உண்டு. வெறும் அர்த்தக் கட்டுக்களை சுமந்து வரும் விறகு வியாபாரியாய் அவை இல்லை. மொழியுடன் உறவு கொள், ஒவ்வொரு பாடலுடனும் பேசிப்பழகு. ஒவ்வொரு எழுத்தின் அடிநாதமும், ஒவ்வொரு எழுத்தின் அடியிலும் பிரபஞ்ச அடிநாதமும் உனக்காய் காத்திருக்கும். மழைத்துளிகளுக்கு ஒரு மொழி, சருகுகளுக்கு ஒரு மொழி, மொழிக்கொரு மொழி. அதில் இருக்கிறது என் மொழி. 
     எனக்கும் மொழிக்குமான மொழி ஒரு மொழி, எனக்கும் எழுத்துக்குமான மொழி ஒரு மொழி. 

திங்கள், 24 செப்டம்பர், 2012

பிச்சைக்காரியும் கொஞ்சம் மணலும்

                               இது ஓர் ஏக்கம். வியப்பு. லூசு  என்று எல்லோரும் சொல்லும் சிலரின் அன்றாட வாழ்க்கை. அவள் யார்? தெரியாது. எப்படி இங்கே? தெரியாது. ஏன் இப்படி ? தெரியாது.
                              ஒரு அழுக்குச் சட்டையோடு எப்போதும் என் விடுதியின் சுவற்று நிழலில் இருப்பவள். கொட்டிவைத்த மணலில் புரண்டு கொண்டு, உடலின் மறைவுப் பகுதிகளை பற்றிக் கவலைப்படாது இருப்பவள். கலைந்த முடி, கவலை காட்டாத முகம். எப்போதாவது சிறு நகை. அடடா என்ன வாழ்க்கை? கஞ்சா அடித்து விட்டு ஒருசிலர் அவள் பக்கத்தில் படுக்கும் பொழுது அவளின் ஈன ஸ்வரம். வெட்கமோ  கற்பென்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவள், பிடிக்காதார் தொடுகையில் சினுங்கிடும் குழந்தையாய்.
                              அந்த மணற்பறப்பு அவள் சிம்மாசனம். நாலடி நிழலோ சமயத்தில் ஓரடி நிழலோ, அவளின் வீடு. என்னால் முடிந்தது, இரவில்  எனக்குத்தரப் படும் ஒற்றை வாழைப் பழத்தை அவளுக்குக் கொடுப்பது.
                           அவள் தருவது என்னைப் பார்த்ததும் சிறு சிரிப்பு.

இயல்

எனக்கு  வேறு வேலையில்லை
வேளைமறந்து என்னையே பாட
அணுவிலிருந்து  அண்டம்வரை
நீளும் என்னியல்பும் எண்ணியல்பும்
மண்ணும் மன் மதனமும்
புண்ணும் பல பிணமும்
பித்தமும் ஓட்டு நத்தமும்
பிரிந்த மஞ்சள் சூரியனும்
பறித்த  ஊமத்தம் பூவும்
 ஈனமும்   மெல்லீனமும்
உள்ளும் உள்ள
கடமும் 
 அட கடவுளும்
கடை உளுந்தும்.. 

திங்கள், 23 ஜூலை, 2012

மீண்டும்

மழை
            மீண்டும் என்னைக் குழந்தையாக்குகிறது
            சாரல் தூவி சிரிப்பை விதைக்கிறது
            கலைந்த மேகங்களுக்கு
            இலையின் ஒலியில்
            என்னதான் சொல்கிறது ?

வியாழன், 19 ஜூலை, 2012

நான் நாத்திகன் ஆனது எப்போது?

நான் நாத்திகன் ஆனது எப்போது? தெரியாது. ஏன்? சொல்கிறேன். சாமியாட்டம், பேய் ஆட்டம் இதெல்லாம் பார்த்து பயந்து ஒழிந்து கொண்டிருந்த நேரம்,  ஒரு தாத்தா சொன்னார் : 'ஏன்  என்று கேட்காதவன் முட்டாள்'. அந்தத் தாத்தா மீது கோபம் எனக்கு. காரணம், அம்மாவிடம் கேட்டால், 'அப்டிலாம் பேசாதடா '. அப்பாவிடம் - 'அப்புறமா சொல்றேன் போய்  தூங்கு'. நானும் மறந்து விட்டேன் கேட்பதை . அதே தாத்தா சொன்னதென்று பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்னது : 'ஏன், எதற்கு, எப்படி என்று கேள்'. தயங்கித் தயங்கி அவரிடம் கேட்டேன், 'சார் ஏன் இப்டி கேள்வி கேக்கணும்' ? அவர் சொன்னார் : 'நீ கேட்க ஆரம்பித்து விட்டாய், இனி கேள்வி கேட்காமல் உன்னால் இருக்கமுடியாது'.  நன்றி அந்தத் தாத்தாவிற்கு  (பெரியார்) இல்லை. பதில் சொல்லாது விட்ட என் பெற்றோருக்கு.

இன்று முது கலை மருத்துவம் படிக்கும் நானும், என் சீனியர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இல்லை என்று நான்  சொல்ல, மாலையில் கோவிலுக்குச் செல்வோமே என்றார். சரி என்றேன். அங்கே, நான்  கை ஏந்தி நிற்கையில்  ஐயர் வந்து பிச்சை போல் திருநீறு போட்டார். திடீர் அன்புடன் அந்த சீனியர் விபூதியை என் நெற்றியில் இட்டு, பார் கடவுள் உன் மனதை மாற்றி விட்டார். நீ திருநீறு கூட வைத்துக்கொண்டாய் என்றார். ஒரு மனிதன் தனது சக மனிதனின் பழக்கங்களை மாற்ற முயல்வதும், அவ்வாறு மாற்றினால் அவனுக்கு உண்டாகும் ஆனந்தமும் அளவு இல்லாதது. அவருக்கும் அவ்வளவு ஆனந்தம் முகத்தில்.


சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன், 'நான் நாத்திகம் கற்றதே கோவிலில் தான். இந்த விபூதி எல்லோரும் ஒரு நாள் சாம்பல் ஆகவே போகிறோம் என்பதை  நினைவில் வைத்துக்கொள்ளவே தவிர, இதில் கடவுளின் அருள் ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை'.' உங்கள் மீதுள்ள அன்பால் வைத்துக்கொண்டேன், நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தது. கல் உங்களுக்கு கடவுள், எனக்கு கலை'. 

பிறகு கோவிலுக்கு ஏன் வந்தாய் என்றொரு கேள்வி. மனிதன் இங்கே தன்னை மறந்த நிலையில் இருக்கிறான். எதுவும் யோசிக்காமல் ஏமாறுகிறான் ஏமாற்றப்படுகிறான். என் பாட்டன், பூட்டனின் தமிழ்ச் சமூகம் எவ்வளவு அறிவியலை இந்த கலைக்குள் நிரப்பியிருக்கிறது என்பதை உணர என்று சொன்னேன்.

எல்லோரும் வணங்கும் கடவுளை கோவிலிலே எதிர்த்துப் பேசுவது தான் பகுத்தறிவா என்று கேட்டார்.  ' நம்பிக்கை இல்லாதவனை நீங்கள் கட்டாயப் படுத்தும் பொழுது, நீ செய்துகொள் எனக்கு வேண்டாம் என்று சொல்லும் நான், செய்ய வைத்தே தீர வேண்டும் என்று இருக்கும் நீங்கள் இதில் எது பகுத்து அறிவது என்று அறிந்து கொள்ளும்' என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்..

வியாழன், 5 ஜூலை, 2012

kilinjal veedu

antha nilavum unthan nagaiyum
vantha alaiyum valaintha karaiyum
thanthak kaiyum thantha manamum
neentha mudiyaa neelvaan meenum
saantha(m) vaasanai sannathi neeyum
meentha kilinjalil moozhgiya naanum
eentha sottril inainthae naamum