வெள்ளி, 27 ஜூன், 2014

பாக்டீரியா காலம் முதல் facebook (முகநூல்) காலம் வரை

பாக்டீரியா காலம் முதல் facebook (முகநூல்) காலம் வரை நாம் அடிக்கடி கேட்பது இந்த வார்த்தை. நம்மில் பலர் இதைக் கடந்து வந்திருப்போம். இன்னும் சிலர் அதைப் பிடித்து  இன்னுமே தொங்கிக் கொண்டிருப்போம். இன்னும் சிலர் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியாமலே அதைச் சொல்லி வைத்திருப்போம்.

கட் (நிற்க). அந்த வார்த்தை என்ன?
.?
இல்லை.
..?
இல்லை.
...?
இல்லை.

வேறு என்னப்பா?

அந்த ஆஸ்கார் வார்த்தை தான் 'முட்டாள்', 'அறிவு கெட்டவனே'.

ஏன் இந்த வார்த்தையைச் சொன்னால் என்ன?
சரி. சில அறிவு நிறைந்த அறிவாளர்கள் சொல்கிறார்களே.
நானே அறிவாளிதான், பிறகென்ன நான் அப்படிச் சொல்வேன் என்பவர்களும் நிற்க, கவனிக்க.

இந்தத் தமிழ் என்ற மொழியில் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கும், இணைந்திருக்கும்.
அட, இது இந்தி எதிர்ப்பும் இல்லை ஒன்றும் இல்லை.
இந்தத் தமிழன் செய்த உன்னதமான பலவற்றுள் மொழியும் ஒன்று, அதன் இனிமையும் ஒன்று.
இங்கே அறிவைக் குறிக்கும் சொற்களில் 'மதி' என்பதும் உண்டு.

ஏன் சொல் கண்டவர்கள் இப்படிச் சொன்னார்கள்?

தமிழ் இயல் மொழி (இயல்பான மொழி).
அது தொட்டே பெயர் வைத்தான் நம் பாட்டன் மதி என்று.

பயந்து இரசிக்கையில் இருந்த நிலவும், அறிவு கொண்டு நிமிர்ந்து நின்று நிலவைப் பார்த்ததற்கும் என்ன வேறுபாடு இருந்திருக்க முடியும்.
பரிட்சைக்குப் படிப்பதற்கும், பின்னர் நிதானம் கொண்டு இதையா இப்படிப் படித்தோம் என்று நமட்டுச் சிரிப்பு கொள்வது போல் தானே.

நிலவு:
வளரும், முழுமை பெரும்.

அழகு.

காதல்.

உயர்ந்த இடம்.

பொதுச் சொத்து.

அது இருக்கும், நீ பார்த்தாலும் சரி, இல்லாது ஒழிந்தாலும் சரி.

நெடுந்தொலைவில் இருந்தும் அலை சீற்றம் உண்டாக்கும் (முழுமதி அலைச் சீற்றம் - gravitational pull)

முழுமையிலும் கரும் புள்ளிகள் இனிமை.

முழுமையிலும் கிரகணங்கள் உண்டு (Eclipse).
கிரகணங்களிலும் கிரணங்கள் உண்டு (diamond ring on eclipse).

அறிவு:
வளரும், முழுமை பெற்றதை உணர்ந்ததும் குறையும், மீண்டும் முழுமை
பெரும்.

அறிவு அழகு.

பிறரை உன் பால் அன்பு கொள்ளச் செய்யும் (அறிஞர் அண்ணாவை திட்டித் தீர்த்தார் கவியரசு கண்ணதாசனார், அண்ணா சொன்னார்: 'அந்தத் தமிழில் நான் மயங்கிவிட்டேன், அவர் திட்டினால் என்ன, புகழ்ந்தால் என்ன').

பொதுச் சொத்து. நீ கற்றுக்கொள். கற்பி.

புரட்சிக்கான வித்து சிலரின் அறிவில் தான் இருக்கிறது. அவர்கள் தொலைவில் இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி.

அது இருக்கும் நீ மதித்தாலும் சரி, மிதித்தாலும் சரி. அறிஞன் தன அறிவை பிறருக்குக்  கொடுக்கிறான். உன் விமர்சனம் அவன் செயலை ஏதும் செய்வது இல்லை.

அறிஞனுக்கும் சறுக்கல்கள் உண்டு.

வஞ்சம் கிரகணமாய் சூழும்.
அறிவு அதில் கிரணங்கள் பாய்ச்சும்.

இதுவும் அது: பிறரை மதி என்றான். 'மதி'த்தலும் நிலவென்க. நீ பிறரை மதி. அவனும் உன் போல் நிலவு தான், உன் போல் அறிஞன் தான் என்பதாலோ?

சில நேரங்களில் தமிழின் சொல் ஆழம், மதிக்க வைக்கிறது.

வியாழன், 22 மே, 2014

பெருமாளும் பேட்டெரியும் (version 1.1)


இந்தப் 'பெருமாளும்  பேட்டெரியும் - கடவுளும் கேமராவும்' கதையில், இதை இரண்டாம் பாகம்  என்று சொல்வதை விட, முதல் பாகத்தின் இரண்டாவது கோணம் என்று வைத்தால், கொஞ்சம் ஒத்துப் போகும்.

Akira எனும் இயக்குனர் எடுத்த Roshomon படம், ஒரே கதையை வேறு வேறு கோணத்தில் சொல்லும் விதம் பற்றி நன்றாகக் கூறும். தமிழிலில் கூட ஆய்த எழுத்து, விருமாண்டி போன்ற படங்களில், இப்படியான கதை ஓட்டத்தைப் பார்க்க முடியும். அந்த அளவிற்கு இல்லையென்றலும், எதோ கொஞ்சம் ஒப்புக்குச் சப்பாணி கதை சொல்வோம்.

பை:
10.00 AM: சரக். சரக். ஜிப் போடற லட்சணத்தப் பாரு. என வெக்கிறான்? charger மாதிரி இருக்கு. எதுக்கு ரெண்டு. தண்ணி சரி, என்ன புதுசா கர்ச்சீப், மாத்திரை. ஓ. எங்கயோ பார்ட்டி கெளம்பறான்.

10.10 AM: டேய் மெதுவா. இப்படி ஒத்தயா போறமே. நமக்கு ஜோடியா ஒரு லேடி பேக் இருந்திருக்கலாம். வெயில் பரவால, இல்ல இவன் வேர்வதான். நமக்குக் கொஞ்சம் உ ஆ.

11.03 AM: என்ன இவ்வளவு சீக்கரமா திரும்பி வந்துட்டான்.

11. 09 AM: charger பத்தி ஏதோ பேசறான். எனக்குள்ள தான்  பாரேண்டா.

1.55 PM: டேய் என்னையும் திரும்பக் கூட்டிட்டுப் போ. போய்ட்டான். சரி, ரெஸ்ட் எடுப்போம்.


பைக்:
10.05 AM: நான் தயார். கொஞ்ச நாளாகவே வெளியே போக வேண்டுமென ஆசை.

10.10 AM: Speed breaker லாம் பாரத்தால் முடியுமா? இன்னும் சற்று வேகமாக. மழையோ வெயிலோ காய வேண்டியதே எம் நியதி. இதில் உனைப் போல் நன்கு பார்த்துக் கொண்டால் நலம். இருந்தும் ஒரு குறை. காற்றைக் கிழித்து என் வேகம் முழுக்க முயன்று பார்க்க வேண்டும்.
ஆனால் நீ, அளவோடு குறைத்துக் கொள்கிறாய்.

10. 20 AM: ர்ர்ர்.. ர்ர்ர். நகர்கிறானா பார். ஆள் வளர்ந்த அளவிற்கு அறிவு வளரவில்லை. இந்த பஸ் டப்பாக்களுக்கெல்லாம் என்னைப் போல் பைக்கைக்கண்டால் அப்படி ஏளனம்.

10.22 AM: வேண்டாம்.

10. 22 1/2 AM: ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

10.45 AM: இது தானா? இன்னும் கொஞ்சம் தூரமாய் இருந்திருக்கலாம். இனி நான் காத்திருக்கிறேன். நீ உள்ளே சென்று வா.


SETC (திருநெல்வேலி - அம்பாசமுத்திரம்) பஸ் டிரைவர்:
10. 15 AM: இவனுவ வேற. சும்மா சும்மா உர்ர்ர் உர்ர்னு போவானுவ.

10. 20 AM: பொரப்பா. நீ பாட்டுல போய்க்கிருக்க.

10. 23 AM: பெருசுஏறுவே. அவன் முந்திப் போறாம்ல.

10. 25 AM: நம்மண்டி பொறுத்துப் போவும்யா.


மாடு:
10. 26 AM: இந்தப் பறவைக்குக் கொழுப்பு. நம்மை இம்சிக்கிறது.

10.30 AM: இது யாரு. அசஞ்சு அசஞ்சு நம்மையே பாக்கறான். நம்ம கறுப்புக் கொன்பன் மாதிரி நம்மையும் வண்டில கட்டப் பாக்கறானா?


எருதுக் கூட்டம்:
10. 40 AM: மெதுவா, மெதுவா. மெதுவா.. இது நம்ம வெயில், நம்ம சேறு.

10.42 AM: இந்த விலங்குகள் யார்? நம்மோடு இருப்பது இரண்டு கால்களில் நடக்கிறது. எப்படித்தான் நடக்க வேண்டிய கால்களில் தின்கிறதோ. ஆனால் இப்படி ஒரு கூட்டம் வருகிறது, போகிறது . நடக்காமல் எதோ ஒன்றின் மீது அமர்ந்து. நம்மை அதில் கட்டாதவரை நிம்மதி.

10.45 AM: அட, நம் பையன் நடக்கும் வரை ஓரமாய் இருக்கிறானே. இது போன்ற மற்ற உயிரினங்கள் நமக்காக ஒதுங்காதே.


ஐயர்:
10.47 AM: அய்யர் காலை 8.30 பூசை முடித்துச் சென்று விட்டார், இனி நாளை தான்.


ASI ஊழியர்:
10.48 AM: 'சார், அவர் சும்மா சொல்றார். மூலஸ்தானம் தான் பார்க்க முடியாது. நாம மற்றத சுத்தி பாக்கலாம்'.

10.53 AM: 'இது சிங்கத் தூண், அதுக்குப் பின்னாடி கல்வெட்டு. ஆனா என்னனு கேக்காதிங்க'.
இந்த அளவு கெளம்பி வந்து பாக்க, என்ன காரணமா இருக்கும். இதுல ஏதும் படிப்பாங்க போல. கேட்போம்.
'நீங்க இதுல ஏதும் M. Phil பண்ற மாதிரியா'.
டாக்டரா, "எதுல சார்?"
'Forensic Science தான உண்டு'. அது என்னப்பா forensic medicine.

10.57 AM: 'இங்க, இந்தப் பீடமும் டிசைனும் முக்கியம். இந்த டிசைன் வச்சு தான் வருசம் கணக்கு பண்றாங்க'
டாக்டர்னு சொல்லியாச்சு, ஆர்வம் எப்படி இங்க.

11.02 AM: 'இனிதான் முக்கியமானதெல்லாம் இருக்கு சார். இந்த நாலு சிற்பத்த பாருங்க. நான் கோயில் உள்ள திறக்கறேன்'.


11.05 AM: 'இப்படி தான் சார், சிலருக்கு நடந்திருக்கு. இந்தப் பெருமாள் சக்தி வாய்ந்த தெய்வம்'. நாம சுத்திக் காட்டிடுவோம்.

11.10 AM: ' இதையெலாம் பாக்கறப்ப தெய்வம்னு ஒண்ணு இருக்கு சார். இப்படி கல்ல செதுக்கி வளைக்கணும். இவ்வளவு காலம் பாதுகாப்பா இருக்கு. தவர, உங்க பாட்டரி'.

11. 40 AM: '8.30 to 5.45 சார், வாங்க'. இந்த வெயில்ல போய்ட்டு ஆள் திரும்ப வருவாரா. பாப்போம், வந்தா நமக்கும் பொழுது போகும்.


மணி:
நீண்ட நாட்கள் சென்று விட்டன. நானும் என் பைக்கும் தனியாக கொஞ்ச தூரம் சென்று. 'ஒரு நெடும் பயணம் எடுத்து சன்னலோர மரங்களையெல்லாம் ரசிக்க ஆசைதான்' என்று என் கல்லூரி நாட்களில் எழுதியது நினைவிற்கு வருகிறது. நான் பேராசைக்காரன், சன்னல் தவிர்த்து நேராகவே பார்க்க, பைக்.
நேற்றுப் பெய்த மழையில் குளங்களில் நீர், ஆற்றில் நீர். தாமரை மொட்டையும், எனக்குப் பெயர் தெரியாத இன்னொரு பூவும் சூடி, ஒரு பெண். அடிக்கும் காற்றில் அலையும் முடி. முகம் முழுக்க சிரிப்பும், கருப்பும். கருமை எங்கள் நிறம். அப்பா, சின்னப் பையனும் பெண்ணுமாக அவர்கள் எதிர்த் திசையில் கடந்து போனார்கள். பூ என்பதும் பெண் என்பதும் குழந்தையில் இருந்தே ஆரம்பிக்கிறது போல.
பறவைகளை எல்லாம் மாடுகள் எப்படி பொறுத்துக் கொள்கிறன. என் சந்தேகம், அதைத் தீர்க்க ஒரு கூட்டத்தைத் தேர்ந்து எடுத்து போட்டோ எடுக்க முற்பட்டேன். பறவைகள் மனிதர்களை பொறுத்துக் கொள்வதில்லை போலும்.
அரசுப் பேருந்துகள் சில தாண்டி, ஆட்டுக் கூட்டங்களுக்கு வழி விட்டு, எருதுகளும் வயல்களும் கடந்து, அரிவாள் மீசைகளிடம் வழி கேட்டு போய்ச் சேர்ந்தேன்.
சில உரையாடல்களுக்குப் பின், உள் பிரகாரம் நுழைந்தால், camera - low battery அடித்தது. உடன் வந்த ஊழியருக்கு அது பெருமாள் செயல் ஆகிப் போனது. எவ்வளவு நேரம் கோயில் திறந்திருக்கும் என விசாரித்து, மீண்டும் பாளையங்கோட்டை புறப்பட்டேன். வரும் வழியெலாம் எனக்கு ஒரே யோசனை. சீக்கிரம் அறைக்குச் செல்ல வேண்டும்.
அறைக்கு வந்ததும் நான் முதலில் செய்தது, Nikkon user manual படித்தது.
சட்டெனப் புரிந்தது காலையில் நான் லேப்டாப்பில் காமெராவை சார்ஜ் போடுவதற்கு பதிலாக, இணைத்து மட்டும் வைத்திருக்கிறேன். அப்போதில் இருந்தே சார்ஜ் இறங்கிக் கொண்டு இருந்திருக்கிறது.

மீண்டும் புறப்பட்டேன், இம்முறை வழி பரிச்சயம், எருதுகள் பரிச்சயம், பெருமாளும் பரிச்சயம்.




















பக்தவத்சல பெருமாள் கோயில், சேரன்மாதேவி, திருநெல்வேலி.



                                                                             கடவுள் என்றால் என்ன? - விரைவில்.


ஞாயிறு, 11 மே, 2014

பெருமாளும் பேட்டரியும் - கடவுளும் கேமராவும்

                   
பாளையம்கோட்டையில் இருந்து சேரன்மாதேவி வரை சென்று, சேரன்மாதேவியில் இருந்து வழி விசாரித்து (ஊரின் வழியே சென்று பேப்பர் மில் பக்கத்தில் திரும்பினால் வரும் பழைய பெருமாள் கோயில் என்பது சூட்சமம் - மாற்றிக் கேட்டால் பதில் வருவது சிரமம்) போய்ச் சேர வேண்டும். பலருக்கும் மறந்து போன அந்தக்கோயில் செல்ல, பேப்பர் மில் திருப்பத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனமிருந்தால் மதி / மிதி. கார் என்றால் கவலை வேண்டாம். இடுகாடும், சில`காட்டு எருமைகளும் தவிர வேறு யாரும் அந்தப் பக்கம் வருவதில்லையாம்.

தென்னை மரங்களின் அணிவகுப்பும், அணில்களின் சத்தமும், ஆங்காங்கே இருக்கும் சமாதிகளும் நம்மைக் கண்டுகொள்ளாது இருக்க, கன்றுகளும் எருதுகளும் வழி விடாது நிற்கும். ஒரு வேலை, இவைகளின் சொந்தக்காரர் வந்தால், நமக்கு வழி கிடைக்கும். இல்லையெனில் நம்மூர் ரெயில்வே கேட் போல் காத்திருக்க வேண்டியது தான்.

வளைந்த இழைந்த ஒற்றிப் பாதையில் நேராகச் சென்றால் (பொருள் குற்றம் வந்தால் மன்னிக்கவும் - எனக்கு இப்படித் தான் வழி சொன்னார்கள்), ASI - பாதுகாக்கப்பட்ட சின்னம் என்ற பலகை வரவேற்கும். அங்கே ஆற்றில் குளிக்க வந்தவர் (கள் / கல்) ( ? நாட்டு நடப்புகள்)  பேசும் இடம் கூட ஆர்ப்பின், உளியின், பதம் தாங்கியிருக்கிறது.

"அய்யர் காலை 8.30 பூசை முடித்துச் சென்று விட்டார், இனி நாளை தான்" என்று ஒரு குரல்.
'ஓகோ' - இது நான்.

"சார், அவர் சும்மா சொல்றார். மூலஸ்தானம் தான் பார்க்க முடியாது. நாம மற்றத சுத்தி பாக்கலாம்" - பணியாளர்.
கண் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது போன்ற உணர்வு.


பேசிக்கொண்டே அவர் கோவில் கதவைத் திறக்க, நமக்குத் தெரிந்த ஒரு உருவம் - சிங்கம். (உபயம் - மாமல்லபுரம்).

"இது சிங்கத் தூண், அதுக்குப் பின்னாடி கல்வெட்டு".
'பின்னாடி சுவத்திலையா?'.
"ஆமா சார். ஆனா என்னனு கேக்காதிங்க".
'எனக்கும் அது தெரியாது. ரெண்டு மூணு எழுத்து படிப்பேன், முழுக்க தெரியாது'.
"ஓகோ, நீங்க இதுல ஏதும் M. Phil பண்ற மாதிரியா". 

'சார், நான் டாக்டர். MD பண்றேன்'.
"எதுல சார்?"
'??? ??? ம். Forensic Medicine'.
"Forensic Science தான உண்டு".
'??? இல்ல சார் ரொம்ப வருஷமாவே FM degree உண்டு'.

சற்று உள்ளே, ஆதிசங்கரர் மேடம் ஒன்று இருக்கிறது. அதை எதிர்த் திசையில் விட்டு விட்டுச் சென்றோம். வெளி வாசலும் உள் கோபுர வாசலும் எதிர் எதிர் திசையில் இருக்கின்றன. (நமக்கு இந்த சாஸ்திரம் எல்லாம் பரிச்சியம் இல்லை).

"இங்க, இந்தப் பீடமும் டிசைனும் முக்கியம். இந்த டிசைன் வச்சு தான் வருசம் கணக்கு பண்றாங்க".
'ம்'.






இந்த யானையின் நெற்றியில் நாமம்  எல்லாம் நன்றாகத் தெரிகிறதே. அடடா. இதைச் செய்தவன் என்ன திறமையுடன் இருந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.



"இந்தா மேல தெரியிற இடம் சுத்தி வர இருக்கும் வழி. இதுல படி ஏதும் இருந்திருக்கணும். இப்ப இல்ல".





"இனிதான் முக்கியமானதெல்லாம் இருக்கு சார். இந்த நாலு சிற்பத்த பாருங்க. நான் கோயில் உள்ள திறக்கறேன்".

அவர் உள் மண்டபம் திறந்தார். லைட் போட்டார். நான் உள்ளே நுழைந்ததும் என் கேமரா அலறியது.

No Chance. No way.

Low battery.

பையில் தண்ணீர், பிஸ்கட், டவல், அவசரத்திற்கான மருந்துகள். நானா மறந்திருப்பேன்.
நான் தான் நைட் சார்ஜ் போட்டேன். காலைல திரும்ப லேப்டாப்ல சேத்து சார்ஜ் போட்டேன்.

"இப்படி தான் சார், சிலருக்கு நடந்திருக்கு. இந்தப் பெருமாள் சக்தி வாய்ந்த தெய்வம்".

'??? என்ன ஆச்சு? சார்ஜ் போட்டேன். சார்ஜ் ஆச்சு. இப்போ சுவிட்ச் ஆப் ஆயிருச்சே. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்'. 

"உள்ள பாப்போம் சார்".

உள்ளே சென்று சிற்பங்களைப் பார்த்தேன். என் கண்களும் மனதும் அந்தக் கலையின் வளைவுகளில் ஆழ்ந்திருக்க, ஒரு குரல் - என்னாச்சு? (நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்).

திரும்ப, பாளையம் கோட்டை புறப்பட்டேன். புறப்படும் நேரம் அவரிடம் சொன்னேன், 'நான் திரும்ப வருவேன் - battery problem னு நினைக்கிறன்.
நீங்க எவ்வளவு நேரம் இருப்பிங்க'.

"8.30 to 5.45 சார், வாங்க".

அடுத்த பாகம் விரைவில். 

திங்கள், 24 மார்ச், 2014

மனிதன் மரணம் இல்லாதவன்

சக்தி  இப்போதும் இனி எப்போதும்
நான் தெய்வத்தின் அம்சம்
எனக்கு நோ வில்லை. சா வில்லை.
நான் அமிர்தம் உண்டேன்.
இப்போதும் இனி எப்போதும் எல்லையற்ற
தெய்வத் துடன் கலந்து விட்டேன்.
இனி எப்போதும் எனக்குத் துன்பம் இல்லை.
எப்போதும் எனக்கு விடுதலை.

          
                                                                 - மகாகவி பாரதி.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

Is தொல்காப்பியம் viable


"மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே"
                                                     தொல்காப்பியம் (எழுத்து - மரபியல் - சூத்திரம் 18)


மெய்யின் வழி அது உயிர் தோன்றும் நிலையே என்பது மெய் எழுத்துக்கள் இருக்க, அதன் வழியில் உயிர் சேர்ந்து உயிர்மெய் தோன்றும் நிலை கொண்டது உயிர் மெய் என்றவாறு.
உதாரணம்: க் + அ = க என உருவாக.

இது ஒரு புறம் இருக்க, நமக்குத் தெரிந்த வேறு ஒன்றைப் பார்போம்.


There lies the body of fetus in utero (inside of uterus); to which life adds in the form of lung maturity so as to make it viable for separate existence. From a mere body of fetus turning into a viable fetus for separate existence it remains in the womb. For what seems to be an important change over, the lung to respire body becomes human. is this we call life adding? is this why legal systems take into consideration the separate existence? (Textbooks of Medicine On viability)


தனியாக இயங்க முடிவதை viability என்று சொல்கிறோம். ஒரு பிண்டம் (மெய்) உயிர் பெறுகிறது, தனியாக இயங்க முடிகிற நிலையை அடைகிறது. இது நுரையீரல் முதிர்வை பொறுத்தது என்பது மருத்துவம். அது கொண்டே, சட்டங்கள் கூட கரு சம்பந்தமான வழக்குகளில், கரு தனியே இயங்கக் கூடியதா என்று கேட்கின்றன.

மெய் (உடல்) இருக்க, உயிர் சேர உயிர்மெய் நுரையீரல் காற்றில் உருவாகி வருகிறது (அது புணர்வில் உயிர் மயங்கி மெய் சேர்கிறது என்பது தனிக்கதை) என்பது தொல்காப்பியம்.

எப்படி இந்தத் தமிழன் இப்படி மொழி செய்தான். எப்படி இவர்களால் இதெல்லாம் உணர முடிந்தது ?

"ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம்" என்றது இதற்குத்தானோ?.

தொல்காப்பியம் இன்றைக்கும் இயங்கக்கூடியதே (viable).